வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; யாரும் சாயமடிக்க முடியாது – வைரமுத்து, Valluvar is as common as the wind; no one can dye it

சென்னை
கடந்த சில மாதங்களாக திருக்குறளின் முப்பாலுக்கும் கவிஞர் வைரமுத்து உரை எழுதி வந்தார். பணிகள் முடிந்த நிலையில், அந்த நூலுக்கு ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ அச்சுப்பணி நிறைந்துவிட்டது. எனது நாற்பதாம் நூல் இது. இதன் முன்னுரையை நான் முனைந்து எழுதியிருக்கிறேன். 13 பக்கங்களில் இயங்குகிறது எனது நீண்ட முன்னுரை.
வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர். காற்றில் யாரும் சாயமடிக்க முடியாது. எந்தப் பழைமைவாதமும் காற்றைப் பூட்டிவைக்க இயலாது. மறைக்க முடியாத சான்றுகளும், மறுக்க முடியாத தரவுகளும் மொய்த்துக் கிடக்கின்றன, முன்னுரையில்.
வள்ளுவம் உலகப் பொதுமறை என்று உலகத் தமிழர்கள் உரக்கச் சொல்வதற்கு, எனது முன்னுரையே வாளுமாகும். கேடயமுமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ நூல், வருகிற ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படுகிறது. திருக்குறளுக்கு உரை எழுதிய 23-வது தமிழ் உரை ஆசிரியர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.






