Filming will begin on May 14th – tamil film producers council announcement | மே 14-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும்

சென்னை,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது. அன்று படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது என்றும் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கு அருகே காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கூறும்போது, “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை நாங்கள் ஆரம்பிப்பது, தயாரிப்பாளர்களை – குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான்.
வரும் 14-ம் தேதி வேலை நிறுத்தம் என்று பெப்சி அறிவித்துள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று யாரிடமும் சொல்லவில்லை. அன்று எங்கள் அமைப்பு படப்பிடிப்பை நடத்தும். தயாரிப்பாளர்கள், புதிதாக நாங்கள் தொடங்கி இருக்கிற, தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொழிலாளர்களைப் பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.






