பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள்

பெங்களூரு,
கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ‘வேற்றுமையில் உலகளாவிய அமைதி’ எனும் கருப்பொருளில் திரைப்பட விழா நடக்கிறது. தொடக்க விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நடிகர்கள் சிவராஜ் குமார், கிஷோர், நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பெங்களூரு ஓரியன் வணிக வளாகத்தில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், சுமார் 60க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. கன்னட திரைப்படம், இந்தியா, ஆசியா, உலகம் என 4 பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
அந்த வகையில் இந்திய திரைப்படப் பிரிவில் இருந்து, தமிழ் படங்களான ‘வாழை, அமரன், மெய்யழகன்’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.