‘என் அப்பா தியேட்டருக்கு வெளியே நின்று…’

சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை தொடர்ந்து, தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
‘உப்பெனா’ பட இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு பட விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் புச்சி பாபு உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார். அவர் பேசுகையில்,
”உப்பெனா’படம் ரிலீஸானபோது, குடும்பத்தினரோடு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றோம். ஆனால், என் அப்பா தியேட்டருக்குள் வராமல் வெளியே நின்றுக்கொண்டு படம் பார்த்துவிட்டு திரையரங்குகளில் இருந்து வெளியே வருபவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்பார். ஆனால், இப்போது ராம் சரணுடன் நான் பண்ணும் படம் பற்றி அவர் மக்களிடம் கேட்க வேண்டியதில்லை” என்றார்.






