கூட்ட நெரிசலில் நடிகையிடம் அத்துமீறிய விவகாரத்தில் போலீசார் விசாரணை

கூட்ட நெரிசலில் நடிகையிடம் அத்துமீறிய விவகாரத்தில் போலீசார் விசாரணை


ஐதராபாத்,

ஆந்திராவைச் சேர்ந்த நிதி அகர்வால், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிம்பு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ படத்தில் அறிமுகம் ஆன இவர், ரவிமோகன் ஜோடியாக ‘பூமி’, உதயநிதியுடன் ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களில் நடித்தார். பவன் கல்யாணுடன் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடித்த இவர், தற்போது பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இரண்டாது பாடல் வெளியீடு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பெரிய மாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சில ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளைக் கடந்து செல்ல முயன்றதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்ததும் நிதி அகர்வால், அங்கிருந்து புறப்பட காரை நோக்கி நடந்தார். ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்து கொண்டனர். அதில் சிலர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தெரிகிறது. அவரை படக்குழுவைச் சேர்ந்த சிலர் பத்திரமாக மீட்டுக் கொண்டு போய், காரில் அமரவைத்தனர். காரில் ஏறியதும், தன்னுடைய உடையை சரிசெய்துகொண்ட நிதி அகர்வால், ரசிகர்களின் இந்த செயலை கடிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய முக பாவனையைக் காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி நடந்த லுலு மாலின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *