Vairamuthu congratulates Rajinikanth on receiving the “Lifetime Achievement” award

கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டி, சர்வதேச திரைப்பட அமைப்பு, “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கவுரவித்தது. எல்.முருகன் முன்னிலையில், கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இந்த விருதை வழங்கினார்.
இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம். அவரது தாழாத கீர்த்திக்கும் வீழாத வெற்றிக்கும் சில காரணங்கள் உண்டு. அவரது வாழ்வின் முன்னுரிமை உழைப்புக்கு; பிறகுதான் மற்றவற்றுக்கு. கலைஉலகம் தந்த புகழை வேறு சந்தைகளுக்கு அவர் மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கம் தூரம் இரண்டுக்கும் எல்லைகட்டத் தெரியும். உணவு உடற்பயிற்சி இரண்டினாலும் தொப்பையற்ற தோற்றத்தைத் தொடர்ந்து காப்பாற்றுகிறார். தான் பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கிறார். சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை. கர்வம் என்பது தனியறையில் இருந்தாலும் பணிவு என்பதைப் பொதுவெளியில் காட்டுகிறார்
’இமயமலை ஆகாமல் எனதுஉயிர் போகாது எல்லையைத் தொடும்வரை எனது கட்டை வேகாது’ என்ற வரிகளை வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார். தான் நன்றாக இருக்கவேண்டும்; அதுபோல் எல்லாரும் என்று நினைக்கிறார். வாழ்க பல்லாண்டு! ” என்று பதிவிட்டுள்ளார்.






