ஐ.டி ஊழியர் கடத்தல் வழக்கு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது இரு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கும்பல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களை பின்தொடர்ந்த மற்றொரு கும்பல் அந்த காரை மறித்து, அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது.
பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதனையடுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று என்று போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன்மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த செப்டம்பர் 17 ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுக்குள் சுமூக தீர்வு ஏற்பட்டதாக ஐடி ஊழியர் தரப்பில் கேரளா ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கேரள ஐகோர்ட் லட்சுமி மேனனின் முன்ஜாமீன் மனுவை ஏற்று, ஜாமீன் வழங்கியுள்ளது. .