Rajkiran is the best actor after Sivaji – Ilavarasu | சிவாஜிக்கு பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘இட்லி கடை’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன் குலதெய்வ அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் தனுஷ் கிடா வெட்டி ஊர்க்காரர்களுக்கு விருந்தளித்துள்ளார். தன் குடும்பத்தினருடன் தேனி சென்ற தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்ததும் விருந்தளித்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு, “தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகரென்றால் அது ராஜ்கிரண்தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எவ்வளவோ பேர் வேட்டியை மடித்துக்கட்டி நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜ்கிரணின் தோற்றம் எவருக்கும் அமையவில்லை. தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தீபாவளி காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். அப்படத்தில் எனக்கு காது கேட்காது. காசு இல்லாமல் தீபாவளியை எதிர்கொள்ளும் நிலையில், அரசியல்வாதிக்கு போஸ்டர் ஒட்டும் வாய்ப்பு வரும். .அக்காட்சியில் ராஜ்கிரண் ஓடிவந்து என்னைக் கூப்பிட்டு, போஸ்டர் ஒட்ட அழைத்துச் செல்வார். அக்காட்சியை எடுக்க 3 மணி நேரம் ஆனது. காட்சியின் இறுதியில் ராஜ்கிரண் வசனம் பேசப்பேச நான் நிஜமாகவே அழுதுவிட்டேன். அக்கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். அப்படியொரு நடிகர். இட்லி கடையிலும் அவர் நடிப்பை பார்த்து பழைய காலத்திற்குச் சென்றதுபோல் ஆகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.