சூதாட்ட செயலி வழக்கு- நடிகர்களின் சொத்துகள் விரைவில் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை | Gambling app case

ஆன்லைன் சூதாட்டத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களில், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி பணத்தை இழந்து வருகிறார்கள். பணத்தை பறிகொடுத்த சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இத்தகைய பின்னணி கொண்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளனர்.
குறிப்பாக, 18 ஆண்டுகளாக உலகளாவிய அங்கீகாரத்துடன் செயல்படுவதாக கூறப்படும் ‘1எக்ஸ்பெட்’ என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு, அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான், இந்தி நடிகர் சோனு சூட், வங்காள நடிகர் அங்குஷ் ஹஸ்ரா, வங்காள நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணையில் ஆஜராகவில்லை. விசாரணைக்கு சென்ற நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அவர்களை சூதாட்ட கம்பெனி எப்படி அணுகியது? விளம்பர படத்தில் நடித்ததற்கான பணம் எங்கே, எப்படி பெறப்பட்டது? ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரியுமா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கிடையே, சூதாட்ட செயலி விளம்பர படத்தில் நடித்ததற்காக கிடைத்த பணத்தை சில பிரபலங்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்க பயன்படுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் சொத்து வாங்கி உள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் கிடைத்த சொத்துகள், குற்றச்செயல் மூலம் ஈட்டிய சொத்துகளாக கருதப்படுகின்றன. எனவே, அந்த சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.