கலைமாமணி விருது: இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது- அனிருத் பெருமிதம்

சென்னை,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை அனிருத் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
“மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும், ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது. என்றும் நன்றியுடன் அன்புடன், அனிருத்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.