தியேட்டர் டிக்கெட் கட்டணமாக ரூ.200 வசூலிக்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பெங்களூரு,
கர்நாடகத்தில் வணிக வளாகங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், தனி தியேட்டர்களிலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து அனைத்து வகையான தியேட்டர்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 12-ந் தேதி அமலுக்கு வந்தது. ஆனால் இதற்கு வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்களை திரையிடும் வர்த்தக நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதையடுத்து கர்நாடக சினிமா வர்த்தக சபை, ஹொம்பாலே சினிமா தயாரிப்பு நிறுவனம், வணிக வளாகங்கள் கூட்டமைப்பின் தேசிய பிரதிநிதி சுபம் தாக்கூர், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் நிறுவன பங்குதாரர் சாந்தனு பை, கீ ஸ்டோன் மற்றும் வி.கே. பில்ம்ஸ் போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ரவி ஒசமணி, தியேட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதன்மூலம் தற்போதைக்கு வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.