தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு… வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்டு, Amicable solution to Producers’ Council

சென்னை
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ‘பெப்சி’க்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக கூறி, ‘பெப்சி’ குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ‘பெப்சி’ அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்க கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ந்தேதி ‘பெப்சி’ கடிதம் அனுப்பியது.
இதனால் படப்பிடிப்பு, பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி தன்பால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், ‘பெப்சி’ தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.






