குடிநீர் விற்கும் கதாநாயகி…அரை லிட்டர் பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா?|The heroine sells drinking water…do you know how much a half-liter bottle costs?

சென்னை,
பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் பிசினஸ் உலகில் நுழைந்துள்ளார். தனது சகோதரி சமிக்சா பெட்னேகருடன் சேர்ந்து பேக்பே என்ற பிராண்டை நிறுவி ஒரு தொழில்முனைவோராக மாறியுள்ளார்.
மக்களுக்கு நல்ல குடிநீரை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் பூமி கூறினார். இமாசல பிரதேசத்தில் நிறுவனத்தை நிறுவியுள்ளதாகவும் அங்கு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும், அவர் கூறுகையில், ”எங்களுடையது ஒரு பிரீமியம் வாட்டர் பிராண்ட் நிறுவனம். பேக்கேஜிங்கிற்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. பாட்டில் மூடியை மக்கும் தன்மையில் உருவாக்கியுள்ளோம்.
அரை லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலையை ரூ.150 ஆகவும், 750 மில்லி வாட்டர் பாட்டிலின் விலையை ரூ.200 ஆகவும் நிர்ணயித்துள்ளோம். ரூ.200க்கு ஹிமாலயன் வாட்டரை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இப்போதெல்லாம், அனைவரும் எனர்ஜி பானங்களுக்கு நிறைய செலவு செய்கிறார்கள். சுத்தமான தண்ணீர்தான் மிக முக்கியமான விஷயம்.
எங்கள் பாட்டில் இயற்கை தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.100 கோடி சந்தையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். 15 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் பாட்டில் இருக்கும் என்று நம்புகிறோம்.
நான் 17 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்தேன். யாஷ் ராஜ் பிலிம்ஸில் பணிபுரிந்தபோது எனது முதல் சம்பளம் ரூ. 7,000. அப்போதிருந்து, நான் சேமித்து வருகிறேன். அந்தப் பணத்தில் இருந்து பேக்பேவைத் தொடங்க முடிந்தது” என்றார். பூமி பெட்னேகர் கடைசியாக ’’மேரே ஹஸ்பண்ட் கி பிவி’’ படத்தில் நடித்திருந்தார்.