விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் "கிழக்குச் சீமையிலே" விக்னேஷ்

சென்னை,
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ரெட் பிளவர்’. சயின் பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரெட் பிளவர் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.
கிழக்குச் சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சொந்த ஊரான ஈரோடு சென்று தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது “ரெட் பிளவர்” என்ற படத்தில் மீண்டும் நாயகனாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சந்திரமுகி, இந்தியன் 2, எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் மாணிக்கம் மற்றும் நடிகர் விக்னேஷ் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விக்னேஷ், “30 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். இடையில் தொழில் விஷயமாக சொந்த ஊர் சென்று விட்டேன். இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளேன். இந்த படத்தை இயக்கும் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் என்னிடம் கதையை கூறினார். கதையை கேட்டு வியந்தேன் அப்போது அவர் இந்த கதை நடிகர் விஜய்க்கு எழுதி வைத்திருந்தேன். அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் உங்களை வைத்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம் எனக் கூறினார். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
2047 ஆண்டு நடக்க போகும் சம்பவத்தை கற்பனையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த ஆபரேஷன் சிந்தூர் போன்று இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.கேரளா, கர்நாடக, தமிழகம் ஆகிய பகுதிகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.