நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கன்னட சூப்பர் ஸ்டார்

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் இந்த கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. தர்ஷனின் ஜாமீன் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’ , வாரணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது, சாதாரண குடிமகனுக்கு சுப்ரீம் கோர்ட்டுதான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சில ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடினர். இதனைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களில் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை ரம்யா, ” நடிகர் தர்ஷனுக்கு எதிராக நான் என்னுடைய கருத்தை முன்வைத்தப் பிறகுதான் இப்படியான ட்ரோல்களை நான் எதிர்கொண்டு வருகிறேன்.ஒரு சினிமா நட்சத்திரமாக நான் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், இம்முறை முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கிறது. இது வன்முறை நிறைந்த செயல்.இதுபோன்றதொரு செயலை நான் இதற்கு முன் சந்தித்ததில்லை. ரேணுகாசாமிக்கு பதிலாக நான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றெல்லாம் பலர் ஆன்லைனில் பதிவுகள் போடுகிறார்கள். என்னைத் துன்புறுத்தும் 42 சமூக வலைதளக் கணக்குகளின் விவரத்தை நான் காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறேன். முன்பெல்லாம், பிரபலமாக இருப்பதால்தான் இப்படியான விமர்சனங்கள் வருகின்றன என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால், இந்த முறை அனைத்து விஷயங்களும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இது எனக்காக நான் கொடுத்த புகார் மட்டும் கிடையாது.
நான் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். பாலியல் வன்கொடுமை, கொலை, மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து நம்மைத் தொந்தரவு செய்யும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.பெண்கள்தான் ஒவ்வொரு நாளும் குறி வைக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு உள்ள அதே சுதந்திரம் எங்களுக்கு ஏன் இருக்கக் கூடாது? நாங்கள் ஏன் மௌனம் காக்க வேண்டும்?” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.
நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக தற்போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர், ” ரம்யாவுக்கு எதிராக நடந்து வரும் விஷயங்கள் கண்டிக்கத்தக்கவை. எந்தப் பெண்ணைப் பற்றியும் அப்படிப் பேசுவது சரியல்ல. அதை நாம் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பெண்களை ஒரு தாயாக, அக்காவாக, மகளாக, மனைவியாக, முதன்மையாக, ஒரு தனி மனிதராக மதிப்பது மிகவும் முக்கியம். சமூக ஊடகம் மிகவும் வலிமையான ஆயுதம். அதை தனிநபரின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி, வெறுப்பையும் பொறாமையையும் பரப்புவதற்குப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் நிலைப்பாடு சரியானது, ரம்யா. நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.