"லூசிபர் 3" படம் பற்றிய வதந்திக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் திரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததற்கு வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர். மோகன்லால் நடித்த ‘எல் 2 எம்புரான்’ படம் ரூ325 கோடி வசூலானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.