கயாடு லோஹரை தொடர்ந்து ‘எஸ்.டி.ஆர் 49’ படத்தில் இணைந்த சந்தானம்|Santhanam joins ‘STR 49’

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள் “தக் லைப்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 49’ படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 50’ படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 51’ படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.
இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமீபகாலமாக இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில் தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்புவும், சந்தானமும் இணைந்து ஏற்கனவே ‘வாலு, வானம், ஒஸ்தி, சிலம்பாட்டம்’ போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






